சமுதாயத்தின் விளிம்பில்

பல ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கருகே புறநகர் பகுதியில் இருந்த ஒரு கோவிலில் நான் டிசம்பர் 24 இரவு கிறிஸ்மஸ் திருவிழிப்புத் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்தேன். அந்தத் திருப்பலியின் நினைவு ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் நேரத்தில் மனதில் எழும். மீண்டும் அந்தத் திருப்பலியின் நினைவு என்னில் எழுந்துள்ளது. திருப்பலிக்கு வந்திருந்தவர்கள் கூட்டம் அந்தக் கோவிலை முற்றிலும் நிறைத்திருந்தது. கோவிலுக்கு வெளியிலும் மக்கள் கூட்டம். அனைவரும் திருவிழாவுக்கு ஏற்ற வகையில் உடுத்தியிருந்தனர். மறையுரை ஆற்றும் நேரம் நெருங்கியது. நான் மக்களை நிமிர்ந்து பார்த்தேன். கோவிலின் நுழைவாசலையும் பார்த்தேன். அப்போது, திடீரென எனக்குள் ஓர் எண்ணம் உதித்தது. அந்த எண்ணத்தை ஒரு கேள்வியாக்கி, மறையுரையைத் துவக்கினேன்:

"அன்பார்ந்தவர்களே, நாம் இங்கே திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த கோவிலுக்குள் மரியாவும், யோசேப்பும் நுழைந்தால் எப்படி இருக்கும்?" என்று கேட்டேன். கோவிலில் சலசலப்பு ஏற்பட்டது. பலர் முகத்தில் புன்னகை படர்ந்தது. ஒரு பெண்மணி சப்தமாகப் பதில் சொன்னார்: "ஓ அது பெரிய பாக்கியமாக இருக்கும். அதைப்போல ஒரு சந்தோசம் இருக்கவே முடியாது." என்று சொன்னார். அவர் சொன்னதை ஆமோதிப்பதுபோல் பலர் தலை அசைத்தனர். ஒரு சிலர் இலேசாகக் கரவொலியும் எழுப்பினர். "அவ்வளவு அவசரமாக, ஆர்வமாகப் பதில் சொல்லிவிடாதீர்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்" என்று அவர்களுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்துவிட்டு, நான் தொடர்ந்தேன்: "நம்மிடையே வந்திருப்பது மரியாவும், யோசேப்பும் என்று நிச்சயமாகத் தெரிந்தால், ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல் மகிழலாம். ஆனால், அந்த இருவரை நம்மில் யாருக்கும் தெரியாது. அவர்கள் ஊருக்குப் புதியவர்கள். பார்க்க பரிதாபமாக இருக்கிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்கள் பகலும் இரவும் கடினமான பயணம் செய்து வந்திருக்கிறார்கள். சரியாக உண்ணாமல், உறங்காமல் வந்திருக்கும் அவர்களது உடையெல்லாம் அழுக்கும் புழுதியுமாய் இருக்கிறது. அவர்கள் குளித்து நாட்கள் ஆகிவிட்டன. இவை எல்லாவற்றையும் விட அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணி வேறு. எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம். ஒருவேளை அந்தப் பெண்ணுக்கு பேறுகால வேதனை ஆரம்பித்திருக்கலாம். எனவேதான் யோசேப்பு அருகில் கோவிலைக் கண்டதும் அந்தப் பெண்ணுடன் அங்கு நுழைந்துவிட்டார்" என்று நான் அந்தக் காட்சியை விவரிக்க, விவரிக்க அவர்களிடையே ஆரம்பத்தில் உருவான சலசலப்பு, சிரிப்பு எல்லாம் அடங்கிவிட்டன. கொஞ்சம் இறுக்கமான அமைதி அங்கு நிலவியது. இதில் கூடுதல் அழகு என்னவென்றால், அந்தப் புறநகர் பகுதியில் வாழ்பவர்கள் பெரும்பாலும் பர்மாவில் இருந்து அங்கு வந்து குடியேறியவர்கள். எனவே, ஊர் விட்டு ஊர் வந்துள்ள இரு புதியவர்களைப் பற்றி நான் சொன்னவை அவர்களுக்கு அர்த்தமுள்ளதாய் பட்டது. அவர்கள் வாழ்வின் எதிரொலியாய் அமைந்தது. தொடர்ந்து நான் மறையுரையில், முதல் கிறிஸ்மஸ் நிகழ்ந்தபோது மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு அனைவரும் சந்தித்த பிரச்சனைகளை அவர்களுடன் பகிர்ந்தேன்.

கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு முறையும் கிறிஸ்மஸ் விழா நெருங்கும்போது, அந்தத் திருப்பலி எனக்கு நினைவுக்கு வரும். அந்த மக்களிடம் கேட்ட அந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டு, விடை தேட முயன்றிருக்கிறேன். நான் கிறிஸ்மஸ் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, மரியாவும் யோசேப்பும் கோவிலுக்குள் வந்தால் நான் என்ன செய்திருப்பேன்? திருப்பலியை நிறுத்திவிட்டு அவர்களுக்கு உதவிகள் செய்யப் போயிருப்பேனா? நிச்சயமாக... அவர்கள் மரியா, யோசேப்பு என்று தெரிந்தால், கட்டாயம் அவர்களுக்கு உதவிகள் செய்யப் போயிருப்பேன். குழந்தை இயேசு பிறந்ததும், அக்குழந்தையுடன் மீண்டும் கோவிலுக்கு வந்து திருப்பலியைத் தொடர்ந்திருப்பேன்.

இப்படி நான் உறுதியாகச் சொல்வதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு. அவர்கள் மரியா, யோசேப்பு என்றும், பிறக்கப் போவது இயேசு என்றும் முன்கூட்டியே தெரிந்திருந்தால் இவற்றையெல்லாம் நான் நிச்சயம் செய்திருப்பேன். ஆனால், வந்திருக்கும் இவர்கள் இருவரும் என் கண்ணுக்கு சாதாரண, எளிய வேற்றூர் மக்கள் என்பது மட்டும் தானே தெரிகிறது. இந்தச் சூழலில் என்ன செய்திருப்பேன்? கோவில் பணியாளரை, பங்குப் பேரவையில் இருப்பவர்களை பீடத்திற்கு அழைத்து, ஓர் அவசர ஆலோசனை நடத்தி, அவர்கள் இருவருக்கும் வேறு ஏதாவது வகையில் உதவிகள் கிடைக்க வழி செய்துவிட்டு, என் திருப்பலியை நான் தொடர்ந்திருப்பேன்.

இவர்கள் மரியா யோசேப்பு என்று நிச்சயமாகத் தெரிந்திருந்தால் ஒரு வகை செயல்பாடுகள். அவர்கள் யார் என்று தெரியாத சூழலில் வேறொரு வகை செயல்பாடுகள். இதுதான் முதல் கிறிஸ்மஸ் அன்று பெத்லகேம் நகரில் நடந்தது. இதைத் தான் இன்று நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம். மரியாவும், யோசேப்பும் பெத்லகேம் ஊரை அடைந்து இடம் தேடுகிறார்கள். அவர்களுக்கு இடம் இல்லை. "அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்." (லூக்கா 2: 6-7) ‘விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை’ என்ற வார்த்தைகளை நற்செய்தியில் கேட்கும்போதெல்லாம் நம்மில் பலர் பெத்லகேம் மக்கள் மீது, முக்கியமாக அந்த விடுதி காப்பாளர் மீது கோபப்பட்டிருக்கிறோம். நமது கோபம் நியாயமா? அவர்களும் நம்மைப் போல்தானே. தங்களிடம் இடம் கேட்டு வந்திருப்பது மரியா, யோசேப்பு என்றும், பிறக்கப் போகும் குழந்தைதான் இஸ்ரயேல் மக்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் காத்திருக்கும் மீட்பர் என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தால், அந்த விடுதி மட்டுமல்ல, பெத்லேகேம் நகரம் முழுவதும் அங்கு திரண்டு அந்தப் பரிதாபமான வழிப்போக்கர்களை வரவேற்றிருப்பார்களே!
பரிதாபமான வழிப்போக்கர்களின் வழியாக இறைவன் வருவதை அவர்களும் உணர வில்லை... ஈராயிரம் ஆண்டுகள் கழித்து, சென்னைப் புறநகர் பகுதி கோவிலுக்கு அந்த வழிப்போக்கர்கள் மீண்டும் வந்திருந்தால், அவர்களை நானோ அங்கு கூடியிருந்த மக்களோ உணர்ந்திருப்போமா என்பதும் சந்தேகம்தான்.
"இவர்தான் உலக மீட்பர்" என்று வானதூதர் அணி எக்காளம் ஒலித்து பெத்லேகேமில் அறிவித்திருந்தால், மீட்பின் வரலாறு வித்தியாசமாக இருந்திருக்கும். ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், விளம்பரமும் இல்லாமல் இறைவன் நம்மில் ஒருவராக, எம்மானுவேலாக வந்து, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுதான் கிறிஸ்து பிறப்பின் அழகு.

முதல் கிறிஸ்மஸ் அன்று இயேசு தந்தது இந்த ஆச்சரியம் மட்டுமல்ல. "இவர்தான் உலக மீட்பர்" என்று வானதூதர் அறிவித்திருக்கலாமே என்று எண்ணுகிறோமே அந்த எண்ணமும் நிறைவேறியது. "இவர்தான் உலக மீட்பர்" என்று வானதூதர் அறிவித்தனர். ஆனால், நாம் எதிர்ப்பார்த்ததுபோல் ஊருக்கு நடுவே எக்காளம் ஒலித்து இந்தச் செய்தி சொல்லப்படவில்லை. மாறாக, ஊருக்கு வெளியே மந்தைகளோடு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த இடையர்களுக்கு வானதூதர் இந்தச் செய்தியைச் சொன்னார். இதுவும் கிறிஸ்மஸ் தரும் ஓர் ஆச்சரியம்தான்.

இந்த இடையர்களைப் பற்றியும், அவர்களுக்குத் தரப்பட்ட நற்செய்தியைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போம். ஊருக்குள் மக்கள் கணக்கெடுப்பு நடந்து கொண்டிருந்தது. அவரவர் தங்கள் பூர்வீக ஊரை, உறவைத் தேடிச் சென்று பெயர்களைப் பதிய வேண்டும். எனவேதான் “தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார்.” (லூக்கா 2: 5) என்று நற்செய்தியில் இன்று வாசிக்கிறோம். இப்படி ஊர் விட்டு ஊர் சென்று தங்கள் பெயர்களை மக்கள் பதிவு செய்துகொண்டிருந்தபோது, இடையர்கள் ஏன் எங்கும் செல்லவில்லை? மக்கள் கணக்கெடுப்பு என்கிறோம். அப்படியானால், இவர்கள் மக்கள் இல்லையா? இவர்கள் மனித சமுதாயத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்று அன்றைய சமுதாயம் ஒதுக்கி வைத்துவிட்டதால், இவர்கள் ஆடுகளோடு தங்களை ஒருங்கிணைத்து, சமுதாயத்தின் விளிம்பில் கிடந்தனர். அவர்களைத் தேடி வானதூதர் வந்து உலகிற்கெல்லாம் மகிழ்வைத் தரக்கூடிய நற்செய்தியை முதல் முறையாகப் பகிர்ந்து கொள்கிறார். மனிதர்கள் என்ற தகுதி கூட இல்லாமல், சமுதாயத்தின் கடைசி இடத்தில், விளிம்பில் வாழ்ந்தவர்களுக்கு கடவுள் முதலிடம் கொடுத்து ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார்.

அவர்களுக்கு வானதூதர் சொல்லும் வார்த்தைகளும் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” (லூக்கா 2: 10-11) வானதூதர் இந்தச் செய்தியில் ‘எல்லா மக்கள்’ என்று ஓரிடத்திலும், இடையர்களுக்குச் சிறப்பிடம் அளித்து ‘உங்களுக்கு, உங்களுக்காக’ என்று சில இடங்களிலும் பேசுகிறார்.

வானதூதர் சொன்ன வார்த்தைகளை நான் இவ்விதம் கற்பனை செய்து பார்க்கிறேன். "அன்பு இடையர்களே, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியைத் தரும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இந்த செய்தி எல்லா மக்களுக்கும் உரியதுதான். ஆனால், இதைக் கேட்கும் நிலையில் மக்கள் இல்லை. அவர்கள் தங்கள் உறவினர்களை வரவேற்பதில், விருந்துண்பதில் எல்லா கவனத்தையும் செலுத்திவிட்டார்கள். இந்தச் செய்தியைப் பெறுவதற்கு அவர்கள் மனதில் இடம் இல்லை. எனவேதான் இந்தச் செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். இந்த மீட்பர் உங்களுக்காகப் பிறந்துள்ளார். அவரை அடையாளம் கண்டு கொள்வதும் உங்களுக்கு எளிது. ஏனெனில் அவரும் உங்களைப் போல் சமுதாயத்தின் விளிம்பில் பிறந்துள்ளார். தீவனத் தொட்டியில் துணிகளில் பொதிந்து கிடக்கும் அந்தக் குழந்தையில் இறைவனை உங்களால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். செல்லுங்கள்" வானதூதர் சொன்னச் செய்தியில் இந்த அர்த்தங்கள் பொதிந்திருப்பதாக நான் உணர்கிறேன்.

தங்களை மீட்பவர் வருவார் வருவார் என்று பல்லாயிரம் ஆண்டுகள் காத்திருந்த இந்த மக்கள் அவர் வந்தபோது அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் அவர்கள் கவனத்தை வேறு எண்ணங்கள் நிறைத்திருந்தன. நாமும் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடும்போது கிறிஸ்துவை இழந்துவிட வாய்ப்புண்டு. இதோ ஒரு கற்பனைக் காட்சி.

ஐந்தாண்டுகள் கழித்து, அயல்நாட்டிலிருந்து அப்பா கிறிஸ்மஸுக்கு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் அனைவருக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. எல்லாருக்கும் பல்வேறு பரிசுப்பொருட்கள் வாங்கி வந்துள்ளார் அப்பா. கிறிஸ்மஸ் அலங்காரங்களும் விதவிதமாக வாங்கி வந்துள்ளார். கிறிஸ்மஸ் குடில் ஒன்று செய்து, பல்வேறு அழகான பொம்மைகள், பூக்கள் என்று அப்பா வாங்கி வந்திருந்த அலங்காரப் பொருட்களால் அந்தக் குடில் முழுவதையும் நிறைத்தனர் அவரது குழந்தைகள். இறுதியில் அந்தக் குடிலில் குழந்தை இயேசுவை வைக்க வேண்டும் அவ்வளவுதான். குழந்தை இயேசுவை அங்கு கொண்டுவந்தபோதுதான் அவர்களுக்குத் தெரிந்தது, அவரை வைக்க அங்கு இடமில்லை என்று... அவ்வளவு தூரம் அவர்கள் அந்த குடிலை பல்வேறு பொருட்களால் நிறைத்திருந்தனர்.

சமுதாயத்தின் நடுவில் சகல மரியாதைகளுடன், பெரும் ஆரவாரத்துடன் நம் இறைவன் பிறக்காமல், சமுதாயத்தின் விளிம்பில் பிறக்கத் தீர்மானித்தார். அவர் பிறப்பதற்கு விடுதியில் இடமில்லை என்பதை விட, விடுதியில் இடம் வேண்டாம் என்று தீர்மானித்து, சமுதாயத்தின் விளிம்பில் பிறந்தார். தான் பிறந்த செய்தியையும் சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்த இடையர்களுடன் முதன் முதலாகப் பகிர்ந்து கொண்டார். இந்தக் கிறிஸ்மஸ் விழாவில் குழந்தை இயேசுவை வழக்கமான கிறிஸ்மஸ் அலங்காரங்கள் மத்தியில் மட்டும் அடையாளம் கண்டு கொள்ளாமல், அவலங்கள் மத்தியிலும், சமுதாயத்தின் ஓரங்களிலும் அடையாளம் கண்டுகொள்ள தேவையான அருளை வேண்டுவோம். தீவனத் தொட்டியில் துணிகளில் பொதிந்து கிடப்பதுதான் உலக மீட்பர். இதை இன்றும் நம்ப முயல்வோம்.