பூலோகம் போற்றும் பூண்டி மாதா
தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கே மூன்று கி.மீ. அருகிலும் கல்லணைக்கு கிழக்கே பதினைந்து கி.மீ. தொலைவிலும் தஞ்சை-திருச்சி இருப்புப் பாதையில் பூதலூர் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே பத்து கி.மீ. தூரத்திலும் பார்போற்ற விளங்குவது தான் அலமேலுபுரம் பூண்டி. இப்போது இது பூண்டி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. பசும் சோலையின் நடுவே வானுயர உயர்ந்த பூண்டித் தாயின் ஆலயம், செந்நெல்லும், செங்கரும்பும், பக்தர்களை தலையாட்டி வரவேற்கும் இனிய காட்சிகளை அலமேலுபுரம் பூண்டியிலே காணலாம்.
வீரமாமுனிவர்
கும்பகோணம் மறைமாவட்டத்தில் உள்ள 87 பங்குகளில் ஒன்று தான் இந்த பூண்டி ஆகும். ஏறக்குறைய 299 ஆண்டுகளுக்கு முன்பு 1710 ல் இத்தாலி நாட்டிலிருந்து இந்தியாவிற்கு இயேசுவின் நற்செய்தியை போதிக்க வந்தவர் தான் கான்ஸ்டாண்டியுஸ் ஜோசப் பெஸ்கி. இவர் இயேசு சபைச்சேர்ந்த குரு. தமிழகத்தில் 37 ஆண்டுகள் வாழ்ந்து கிறிஸ்தவ குருவாக சமயத்தொண்டு ஆற்றினார். இவரை தமிழகவழக்கப்படி அருட்தந்தை வீரமாமுனிவர் என்றும் அழைக்கிறோம். இவர் 1714-1720 இந்த ஆண்டுகளில் பூண்டியில் தங்கியிருந்தபோது மரியன்னைக்கு ஆலயம் ஒன்று கட்டினார்.. அங்கு எழுந்தருளியுள்ள மாதாவை அமலோற்பவ மாதா எனப் போற்றி வணங்கினார். 1945 ல் பூண்டி திருத்தலமாகவே விளங்கியது.
144 ஆண்டு பழமை வாய்ந்த சுரூபம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்துநகரில் 1858ஆம் ஆண்டில் பிப்ரவரி 11 ஆம் நாள் அன்னை மரியா பெர்னதெத் என்ற சிறுமிக்கு காட்சி தந்து 'நாமே அமல உற்பவம்" என்று சொல்லி மக்களை செபிக்கும்படி கேட்டுக்கொண்டார். லூர்துநகரில் மாதா திருக்காட்சி தந்தார். இதன் நினைவாக அதே ஆண்டில் அதே தோற்றத்தோடு வடிவமைக்கப்பெற்ற மூன்று மாதா சுரூபங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இவற்றில் ஒன்றுதான் பூண்டிமாதா ஆலயத்தில் வைக்கப்பட்டது. 144 ஆண்டு பழமை வாய்ந்த அந்த சுரூபம் தான் பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா என்று மக்களால் போற்றப்படுகிறது.
முதல் புதுமை
1949இல் மிக்கேல்பட்டி என்னும் சிற்றூரை சார்ந்த பெரியவர் ஞானதிக்கத்தின் வயிற்றுவலி, அன்னையை நம்பியதால் அற்புதமாக குணமானது. இதுவே இத்திருத்தலத்தில் நடந்த முதல் புதுமை. அவரளித்த காணிக்கையான நற்கருணை கதிர் பாத்திரம் இன்னும் இன்றும் அன்னை புகழ்பாடுகிறது.
பூண்டி பங்கு 1945 ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் நான் மேதகு ஆயர் பீட்டர் பிரான்சிஸ் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. இது 1995 ஆம் ஆண்டு மேதகு ஆயர் பீ. ரேமிஜியுஸ் காலத்தில் ஐம்பதாம் ஆண்டு நிறைவாக பொன்விழா கண்டது.
திருத்தலப் பேராலயம்.
இத்திருத்தலம் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் உத்தரவு பெற்றதன் பின் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3ஆம் தேதி பசிலிக்காவாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 4 பசிலிக்காக்களுள் பூண்டியும் ஒன்றாய் பாரெங்கும் பக்தி மணம் பரப்பிவருகிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுநாதர் பாடுபட்ட திருச்சிலுவையின் சிறுபகுதி கர்தினால் லூர்துசாமி அவர்களின் உதவியால் அருட்தந்தை இராயப்பர் அடிகளார் பூண்டிக்கு கொண்டு வந்தார். அந்த திருச்சிலுவை அருளிக்கம் பக்தர்களின் வணக்கத்திற்காக மாதா பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பூண்டித்தாயின் பரிபூரண பலனைப் பெற்றுத்தரும் அற்புத ஆறு நாட்கள்!
- ஜனவரி-3 பேராலயம் புனிதப்படுத்தப்பட்ட பொன்னாள்.
- தவக்காலத்தின் ஆறாவது வெள்ளி.
- மே-15 திருத்தல பேராலய ஆண்டுவிழா.
- ஜுன் - 29 புனித பேதுரு, புனித பவுல் நாம விழா.
- ஆகஸ்ட் -3 இவ்வாலயம் பேராலயமாக அறிவிக்கப்பட்ட நாள்.
- செப்டம்பர் -8 புனித அன்னையின் பிறப்பு விழா.
மற்றும் தேவைக்கருதி சிறப்பு திருப்பலிகளும் நடைபெறுகின்றன. மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு சிறுதேர்பவனியும் நவநாள் திருப்பலியும் பேராலய உறுப்பினர்களின் கருத்துகளுக்காக ஒப்புக் கொடுக்கப்படுகிறது.
அன்பிரவு வழிபாடு
இறை அன்பு என்பது தனித்தன்மையானது. இறைவன் அவரவருக்கே (ஒவ்வொருவருக்கும்) உரிய பொருள். இந்த உறவே இறுதிவரை நிலைக்கக் கூடியது. இந்த அன்பே இறைவனையும், மனிதனையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாத முதல் சனிக்கிழமையிலும் இரவு 9-12 மணிவரை அன்பிரவு செபகூட்ட வழிபாடு நடைபெற்று திருப்பலியுடனும், இறையாசீருடனும் நிறைவேற்றப்படுகிறது.
திருநாட்கள்
கொடியேற்றம் : மே - 6
தேர்பவனி : மே -14
திருவிழா திருப்பலி : மே - 15
அன்னையின் பிறப்புப் பெருவிழா
ஆகஸ்ட் - 30 கோடியேற்றம்.
செப்டம்பர் - 8 தேர்பவனி
செப்டம்பர் - 9 திருவிழா திருப்பலி
இந்த திருத்தலத்தில் பணியாற்றிய பங்குத் தந்தையர்கள் பெயர்
அவர்கள் பணிபுரிந்த காலம்
அருட்தந்தை இருதயம் பவுல் 04.01.1945 11.01.1948
அருட்தந்தை. மரிய ஆரோக்கியம் 13.01.1948 10.02.1948
அருட்தந்தை ஓ. துரைசாமி 11.02.1948 26.09.1948
அருட்தந்தை டேவிட் 27.09.1948 02.06.1952
அருட்தந்தை அருமைநாதன் 03.06.1952 07.10.1952
அருட்தந்தை. மரிய மிக்கேல் 08.10.1952 31.08.1955
அருட்தந்தை லூர்து சேவியர் 01.09.1955 16.04.1972
அருட்தந்தை உபகாரசாமி 16.04.1972 31.08.1972
அருட்தந்தை இராயப்பர் 01.09.1972 15.06.1991
அருட்தந்தை. சூசை 16.06.1991 20.08.1997
அருட்தந்தை தங்கசாமி 20.08.1997 08.06.2003
அருட்;தந்தை குழந்தைசாமி 08.06.2003 08.06.2009
அருட்;தந்தை செபாஸ்டின் அதிபர் 08.06.2009 -
அருட்தந்தை அருள்சாமி துணை அதிபர் 08.06.2009 -
அருட்தந்தை சகாயராஜ் பங்குதந்தை 08.06.2009 -
வீரமாமுனிவரின் சிறப்பு அம்சம்.
கீழ் வரும் படங்களை கவனமாகப் பார்க்கவும்

மேலே உள்ள படங்களில் சிலுவைகளை சற்று கூர்ந்து நோக்குங்கள். கோயில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. எனவே புதிய கட்டிடத்தில் உள்ள சிலுவையின் முகப்பு கிழக்கு மேற்காக அழைந்திருக்கும். ஆனால் மாதா சுரூபம் வைக்கப்பட்டுள்ள பழைய ஆலயத்தின் கேபுரத்திலுள்ள சிலுவையானது வடக்கு தெற்காக இருப்பதை கவனிக்கவும். இந்த மாற்றம் தான் வீரமாமுனிவரின் சிறப்பு அம்சமாகும். அதற்கு வீரமாமுனிவரின் விளக்கமானது. 'எப்படி காந்தத்தால் வடக்கு தெற்கு ஒன்றையென்று ஈர்த்துக் கொள்கின்றனவோ அதுபோல் நாமும் இயேசுவில் ஈர்க்கப்படவேண்டும் என்பதே ஆகும்." வீரமாமுனிவர் கட்டிய ஆலயங்கள் அனைத்திலும் இந்த சிறப்பு அமைப்பைக் காணலாம் என கூறப்படுகின்றது..
நீங்கள் திருத்தல பேராலயத்தின் நிரந்தர உறுப்பினர்களாக விரும்புகிறீகளா?
ஆலய வளர்ச்சிக்காகவும், அர்ப்பண உள்ளம் உடைய பக்தர்களை ஊக்குவிப்பதற்காகவும், ஆலய வளர்ச்சிப்பணியில் பகடதர்களை ஈடுபடுத்துவதற்காகவும், நிதி திரட்டுவதற்காகவும் உறுப்பினர்கள் திட்டம் உள்ளது. அதில் உறுப்பினராக சேரவிரும்புவோர் கொடுக்கும் சிறுதொகை பேராலய வளர்ச்சிக்கு பேருதவியாக அமைகிறது. உறுப்பினர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பங்களுக்காகவும், பேராலயத்தில் நடைபெறும் ஒவ்வொரு திருப்பலியிலும் செபிக்கப்படும். நீங்களும் உறுப்பினராகி அன்னையின் ஆசி பெறுங்கள்.
பூண்டிமாதா பேராலயத்திற்கு (அறக்கட்டளைக்கு) வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமானவரிச் சட்டம் 80-ஜி சலுகை உண்டு.
அன்னையின் பக்தர்களும், உறுப்பினர்களும் உறுப்பினர்சந்தாவோ, நன்கொடையோ, திருப்பலிகருத்துக்காக அனுப்பும்போது தயவு செய்து கவரில் அனுப்பவேண்டாம். மாறாக மணிஆர்டர், காசோலை அல்லது கேட்புக் காசோலையை Infavour of The Rector, Pooni Madha Basilica என்று எடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். உங்கள் முகவரியை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பின்கோடு, உறுப்பினர் எண் ஆகியவற்றைத் தெளிவாக எழுதவும்.
Rev.Fr.M.A.Sebastin,
Rector,
Poondi MadhaBaslilca,
Poondi(Thirukattupalli)
613105
INDIA.
உங்கள் கவனத்திற்கு
அன்பு பக்தர்களே! சில குழப்பங்களையும் தவறுகளையும் தவிர்ப்பதற்காக கீழ்காணும் நெறிமுறைகளை பின்பற்றும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
புதிதாக திருமணமான தம்பதியர்கள் தங்களது திருமண சான்றிதழ் அல்லது இருவரும் சேர்ந்து எடுத்த திருமண புகைப்படத்தை காண்பிக்கவேண்டும். குழந்தைகளை அழைத்து வராத தம்பதியர்களுக்கும் இது பொருந்தும்.
குழுவாக அல்லது தனியாகவோ வருகிற ஆண்(கள்)-பெண்(கள்) தங்களது பங்குத் தந்தையின் சிபாரிசு கடிதம் பெற்றுவரவேண்டும்.
எப்போதும் அறைகளுக்கு முன்பதிவு செய்யப்படுவதில்லை.
திருத்தல அதிபர் அருட்தந்தை எம். ஏ. செபாஸ்டின் அவர்கள் வந்த அன்புக்கும், ஆதரவுக்கும் மற்றும் அவர் அளித்த பல அரிய தகவல்கள் அனைத்துக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றி!