கர்த்தரின் கருணையில் ஊனமுற்றோர்
" அசாதாரண மனிதர்கள் " என்று இங்கே குறிப்பிடப்படுவது ஊனமுற்றவர்களை. சாதாரண சராசரி மனிதனிமிருந்து உடல் கூறுகளிலோ அல்லது மன தத்துவரீதியிலோ சற்று மாறுபட்ட குணங்கள் உடையவர்களை நாம் " ஊனமுற்றோர் "என கணிக்கிறோம். இவர்கள் மூளைக் கோளாரு, உணர்ச்சியினால் தாக்கப்பட்டவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன்,சமுதாயத்துடன் ஒத்துழையாமை, பேச்சு திறன் அற்றோர், பார்வை திறனற்றோர், காது கேளாதோர், முடக்க வாதமுடையோர், தீராத வியாதி, வலிப்புடையோர் என வகைப்படுத்தலாம்.
இயேசு பெருமான் தனது படிப்பினையை மக்களிடையே போதித்துக் கொண்டு இருக்கையில் ஊனமுற்றோர் மீது தனிப்பட்ட சிரத்தை எடுத்து கருணையுடன் அவர்களை குணமாக்கினார். புதிய ஏற்பட்டில் நிகழ்ந்த மூன்று ஊனமுற்றோரின் குணப்படுத்துதலை இங்கு எடுத்துகாட்டாக காண்போம்.
இயேசு சென்று கொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ் நீரால் சேறு உண்டாக்கி, அச் சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, 'நீர் சிலோவாம் குளத்துக்குப் போய் கண்களைக் கழுவும்" என்றார். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்று திரும்பினார் (யோவான் 9:1-7).
இயேசு படகேறி மறுகரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம் 'மகனே! துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார். மேலும் அவனை நோக்கி 'நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு போ" என்றார். அவரும் எழுந்து தமது வீட்டிற்குப் போனார் (மத்தேய10 9:2-7).
காது கேளாதவரும், திக்கி பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர் மீது கைவத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர். இயேசு தமது விரல்களை அவர் காதுகளில் இட்டு உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு வானத்தைப் பார்த்து அவரை நோக்கி 'திறக்கப்படு" என்றார். உடனே அவரது காதுகள் திறக்கப்பட்டன. நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாக பேசினார் (மாற்கு 7:32-35).
ஏன் இயேசு இவ்வாறான அற்புத நிகழ்வுகளை செயலாற்றினார்? அவர் தமது குணப்படுத்தும் ஆற்றலை விளம்பரபடுத்தவா? மகிமை பெறவா? அல்லது இதனை ஒரு தூண்டிலாகக் கொண்டு மக்களை தன்பக்கம் ஈர்க்கவா? அல்ல. நாம் இங்கு சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளும் கருத்து இயேசுவின் அரிய நிகழ்வை நிகழ்த்தும் வல்லமையை அன்று, மாறாக அவருடைய மனித நேயத்தின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுவதே. இதனை நம் வாழ்க்கையில் மையக் கருத்தாகக் கொண்டு, நம் வாழ்வில் நிகழும் தெய்வீக அன்பினை வெளிபடுத்திகாட்டுவதின் மூலம்உணரலாம். 'அன்பு" என்று நாம் இங்கு குறிப்பிடுவது உணர்ச்சி வசப்பட்ட அன்போ அல்லது பாசத்தினால் எழுப்பப்படும் அன்போ அல்ல. இங்கு 'தெய்வீக அன்பு" என்பது நன்கு உணரப்பட்ட இரட்சிப்பின் நல்லெண்ணம். இதனை விளக்க நாம் புதிய ஏற்பாட்டில் கிரேக்க மொழியில் 'அன்பு"க்கு கையாளப்படும் மூன்று வார்த்தைகளைக் கொண்டு பூர்ணமாக உணரலாம்.
முதல் வார்த்தை ' zros '. இதனை பிளேடானிக் தத்துவத்தில் ஆன்மா இறைவனின் அன்புக்காக ஏங்கு நிலை. ஆனால் இது நாளடைவில் மாறி நடைமுறையில் இது " காதல் " என்று இருபாலருக்கிடையே உள்ள அன்பை குறிக்கிறது.
இரண்டாவதாக ' Philia ' என்பது இரத்த உறவைக் கொண்ட அன்பு, சகோதர் வாஞ்சை அல்லது நண்பர்களிடையே தோன்றும் " நட்பு ". இது ஒரு விதத்தில் இருவரிடையே நட்பை பரிமாற்றிக் கொள்வதாகும். எதிர்பார்ப்புக்களையுடைய நட்பு. நாம் நம் நண்பனை அல்லது சகோதரனை நேசிப்பதுப் போல அவனும் நம்மை நேசிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. ஆனால் நாம் நம் எதிரிகளை அல்லது வெறுப்பவர்களை நேசிக்குபோது இந்த இரண்டு வகையான " அன்பை " குறிக்காது.
இறுதியாக உள்ளது ' Agape ' என்ற கிரேக்கச் சொல். எல்லா மனிதர்களின் நன்மைக்காகவும், அவர்களை புரிந்து கொள்ள ஏற்படும் உணர்ச்சியான 'மனித நேய"த்திற்கு ஈடாக அர்த்தம் கொள்ளலாம். 'மனித நேயம்' உள்ளத்தில் பொங்கி எழும் அன்பு. இது பரிபுரணமான ஓரு எழுச்சி. பிறரால் தூண்டப்படாத, சிந்தனைக்கு அப்பாற்பட்ட, தன்னிச்சையாக உருவாக்கப்பட்ட அன்பாகும். ஆகவே 'மனித நேயம்" நம் வாழ்க்கையில் எல்லோரையும் பிணைக்கும் கருவியாகும். இதனால் ஆண்களும் பெண்களும் சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் அன்பு கொள்ள ஊக்குவிக்கும்.
இயேசு ஊனமுற்றோரை நலப்படுத்தியதில் எந்த விதமான எதிர்பார்ப்பையும் நோக்கமாக கொண்டு செயல்படவில்லை. மாறாக அவர் மனித குலத்தின் மீது அளவிலா அன்பு கொண்டதே இதற்கு காரணம். அவர் தம்மை மக்களின் நண்பன்என்றும், நண்பனுக்காக நண்பன் போல் உயிரைத் தியாக செய்ய முன்வருவதாகவும், மக்களை பாதுகாக்கும் நல்லாயனாக இருப்பதாக மொழிந்தார். இதற்கு மேல் நாம் என்ன எதிர்பாக்கவேண்டும்! இயேசுவை பின்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இதுவே.

நல்ல கிறிஸ்துவனின் முக்கிய குணம் 'மனித நேயம்" கொண்டு வாழ்வதாகும். நாம் நம் மனதில் 'மனித நேயம்" என்ற பண்பை ஊட்டி வளர்க்க வேண்டும். இதன் மூலம் நாம் இயேசுபோல் மனித நேயத்தில் செழிக்க வேண்டும். இன்றையசூழ்நிலையில் தனித்தனியே அல்லல் பட்டு கிடக்கும் மனித சமுதாயத்தை ஒன்றினைக்கும் இணைப்பு சக்தி 'மனித நேயம்" அன்றி வேறொன்றுமில்லை.
மனிதா! நீ நடைபாதியில் சென்று கொண்டு இருக்கும் போது, சாலையை கடக்க ஒரு பார்வையற்றவன் உதவியை நாடுகிறான். நீயோ உனது காரியம் தான் முக்கியமென எண்ணிக் கொண்டு ஏன் மற்றவர்கள் அவனுக்கு உதவவில்லை என அங்கலாய்த்துக் கொண்டோ அல்லது குறை கூறிக்கொண்டோ உன் வழி சென்றால் ஏது பயன்? இப்பொழுது சிந்தி. இது நேற்று நடந்தது போல் என்றும் நடக்கும் நிகழ்ச்சியாகக் கொள்ளாதே. ஊனமுற்றோர் உங்களிடம் எதிர்பார்ப்பது அனுதாபம் அன்று. உங்களை சிநேகிதனாக, 'நான் உங்களைப் பற்றி கவலை கொள்ளுகிறேன்" என்று மனித நேயத்துடன் பலனை எதிர்பாராத உதவும் கரங்களாக.
இறைமக்களே இன்றே உங்களிடம் 'மனித நேயம்" தோன்றட்டும். எல்லோரும் சகோதர, சகோதரிகள் என்ற உயர்ந்த கருத்தும் பிறக்கட்டும். 'மனித நேயத்தை" வளர்ப்போம்.
AJS ராஜன் - சென்னை