பெரிய வியாழன்

ஆண்டவரின் இரவு விருந்து - நிகழ்வுக்குத் தேவையானவை:

1.1 கோவில் முன்புறம்:

திரு உடைகள் (மஞ்சள்) தூபம், சாம்பிராணி, மெழுகு திரிகள், திருச் சிலுவை, பன்னிரெண்டு ஆண்கள், மேசை, வெள்ளைத் துணி, திருப்பலிப் பாத்திரம் இரசம், அப்பம், மரமணி.
பீடம்திருப்பலிப் புத்தகம், மெழுகுதிரி, பீட அலங்காரம் (வழக்கம்போல் அமைதல் வேண்டும்)

1.2 பாதம் கழுவும் சடங்கிற்கு (சிறிய மேசையில்):

குவளையில் தண்ணீர், பெரிய பாத்திரம், துண்டு, சோப்பு, இடுப்பில் கட்ட துணி, பிரெட் (12), மரமணி, கைமணி.

1.3 காணிக்கை மேசை:

இரண்டு நாளுக்கு தேவையான திருஅப்பம், வழக்கமான பிற பொருட்கள் இருத்தல் வேண்டும்.

1.4 நற்கருணை ஆராதனைக்கு:

திருமேனிதுகில், மெழுகுதிரி, தூபம், சிறப்பு பீடம் அலங்கரிக்கப்பட வேண்டும் (திருப்பலி துவங்குமுன் நற்கருணைப் பேழை வெறுமையாய் இருக்க வேண்டும்.

முன்னுரை:

உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று பறைசாற்றிய இயேசு, பணிவிடை பெற அல்ல, பணிவிடை புரியவே என்று தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி, இறையரசுப் பணிக்குச் சான்று பகர்ந்து, தன் மீட்புப் பணி தரணியில், திருத்தூதர்கள் வழி தொடர்ந்து நீடிக்கவும், அருட்சாதனங்களின் வழி அருளை அளவில்லாமல் ஆன்மாக்களின் மீது பொழியவும், விண்ணகம் நோக்கிய பயணத்தில் இருக்கும் நமக்கு, வழிப்பயணக் கொடையாகவும், இன்சுவை உணவாகவும், தன் உடலையும், இரத்தத்தையும் தானமாய் கொடுத்து, நற்கருணை என்ற திருவருட்சாதனத்தை ஏற்படுத்தி, நான் உங்களுக்கு அன்பு செய்தது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செய்யுங்கள் என்று அன்புக்கட்டளை வழங்கிய நன்னாள் இன்று. ஆம் இன்று திருப்பாடுகளின் பெரிய வியாழன். இயேசுவின் பணிவு அவரது அன்பு பணிக்கு பெருமை சேர்த்ததுபோல, வாழ்வுக்கு அவரது கல்வாரி மதிப்பீடுகள் அடித்தளமாய் அமைய இன்றைய வழிபாட்டிலே மன்றாடுவோம்.

இன்றைய திருவழிபாடானது நான்கு பகுதிகளை கொண்டுள்ளது.
1.	வார்த்தை வழிபாடு
2.	பாதம் கழுவும் சடங்கு
3.	நற்கருணை வழிபாடு
4.	நற்கருணை இடமாற்றப் பவனி

எனவே இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பொருளுணர்ந்து பக்தியோடு பங்கெடுப்போம்.
(உன்னதங்களிலே கீதம் பாடும் போது அனைத்து மணிகளும் ஒலிக்கப்பட வேண்டும். இதுமுதல் பாஸ்கா திருவிழிப்பு வரை மணிகள் ஒலிக்கலாகாது.)

1. இறைவார்த்தை வழிபாடு

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

பாஸ்கா என்பது கடந்து செல்லுதல் எனப் பொருள்படும். இறைவன் தான் தேர்ந்தெடுத்த மக்களை வாழ்விலிருந்து மீட்டு, செங்கடலைக் கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் சென்றார். அதுபோலவே பாவம் நிறைந்த இந்த உலக நிலையைக் கடந்து, பரிசுத்த விண்ணக வாழ்வை அடைய முயற்சிப்போம் என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்திற்கு செவி கொடுப்போம்.

முதல் வாசகம்

பாஸ்கா இராவுணவு பற்றிய விதிமுறைகள்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14

எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்:

அவர்கள் இம்மாதம் பத்தாம் நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ண வேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.

நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து, விரைவாக உண்ணுங்கள். இது ‘ஆண்டவரின் பாஸ்கா'. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது.

இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

பதிலுரைப் பாடல்

திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 1 கொரி 10: 16)
பல்லவி கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதே.
ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். - பல்லவி
ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். - பல்லவி
நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

நம் அனைவர் மேலும் கொண்ட அன்பினால் தன்னையே தியாகமாக கொடுத்த கிறிஸ்துவின் மரணத்தை அறிக்கையிடுவதுதான் திருப்பலி. எனவே நமது வாழ்வு ஆதரவற்றோருக்கு, துன்பப்படுவோருக்கு, துயருறுவோருக்கு அன்பை கொடுப்பதாக, ஆதரவு தருவதாக இருக்கிறதா? என சிந்திக்க அழைக்கும் வாசகத்திற்கு செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசகம்

அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26

சகோதரர் சகோதரிகளே,
ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார்.

ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 13: 34
'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

(யோவா 13: 1-15): பாதங்கள் கழுவுதல் என்பது அடிமைகள் அல்லது பணியாளர்கள் செய்ய வேண்டிய வேலை. ஆனால் இறை அரசை கட்டியயழுப்ப வந்த இறைமகன் இயேசு, தனது திருத்தூதர்களின் பாதங்களை கழுவி, தான் ஒரு பணியாளனாக செயல்படுகிறேன், எனவே நீங்களும் பணியாளர்களாக செயல்படுங்கள் என அறிவுறுத்தும் நிகழ்வை நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15

பாஸ்கா விழா தொடங்க இருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்துகொள்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார். அப்போது சீமோன் பேதுரு, “அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்றார். இயேசு அவரிடம், “குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை” என்றார். தம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் ‘உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை’ என்றார்.

அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்றார்.

2. பாதம் கழுவும் சடங்கு

முன்னுரை:

யூத வழக்கத்தில் வெளியே சென்ற ஒருவர் மீண்டும் வீட்டிற்குள் நுழையும்போது தன் பாதங்களைக் கழுவுவது வழக்கம். அதில் இயேசு முற்றிலும் மாறுபட்டு பணிவிடை பெற அன்று, பணிவிடை புரியவே வந்தேன் என்றும், பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் பணியாளனாய் இருக்கட்டும் என்றும் நீங்களும் இவ்வாறே செய்யுங்கள் என்றும் சொல்லி, தம் அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவிய பணிவான பணியை, நிகழ்வை, இப்போது குருவானவர் இங்கு அமர்ந்திருக்கும் பன்னிருவரின் பாதங்களை கழுவி நமக்கு பாடமாக்குவார். இந்த நிகழ்வு வெறுமனே ஒரு சடங்காக மட்டுமல்ல மாறாக, நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் தாழ்ச்சியுள்ள வாழ்வு வாழ பக்தி நிறைந்த உணர்வோடு இதில் பங்கெடுப்போம். (விசுவாச அறிக்கை இல்லை).

இறைமக்களின் வேண்டல்கள் (பாதம் கழுவும் சடங்கு முடிந்தவுடன்)

1. வார்த்தையான இறைவனே! எம் திருச்சபையின் ஊழியர்கள் உம் வார்த்தையின் வழியில் பயணித்து இறைமக்களை அன்பின் வழியிலும், ஒளியிலும் வழிநடத்தவும், உமது வழியைப் பின்பற்றி எம் திருச்சபை அகிலமெங்கும் தழைத்தோங்கவும் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2. அன்பின் இறைவா! எம் தலைவர்கள் தங்களின் தலைமைப் பொறுப்பினையும், கடமையினையும் உணரவும், மக்களை செம்மையாகவும் நீதி, நியாயம், மனிதமாண்பு, ஆகிய நல்ல நெறிகளுடன் வழிநடத்தவும், தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஒளியாம் இறைவா! உம்மையும், உம் வார்த்தைகளையும் பின்பற்றும் நாங்கள் உமது அன்பையும் பகிர்வையும் தியாகத்தையும் எங்கள் வாழ்வில் பிரதிபலிக்கவும் எங்கள் அன்றாட வாழ்க்கையில் உம்மை மையமாக வைத்து உம் அன்பின் மக்களாக வாழத் தேவையான அருளைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நித்திய குருவான இறைவா! உம் அடிச்சுவடுகளைப் பின் தொடர்ந்து உமது பணியைச் செய்ய தங்களையே அர்ப்பணித்திருக்கின்ற குருக்களுக்காக வேண்டுகிறோம். நீர் குருத்துவத்தை ஏற்படுத்தியிருக்கின்ற இந்நாளில் அவர்கள், தங்களின் பணிவாழ்வில் சந்திக்கும் அனைத்துத் துன்பங்களையும், பொறுமையுடனும் இன்முகத்துடனும் ஏற்றுகொள்ளத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நற்கருணை வழிபாடு

காணிக்கை பாடல்:

அன்பும் நட்பும் எங்குள்ளதோ...
(காணிக்கை மன்றாட்டுடன் திருப்பலி தொடரும்,
நன்றி மன்றாட்டு முடிந்த பிறகு நற்கருணை இடமாற்றப் பவனி)

4. நற்கருணை இடமாற்றப் பவனி

முன்னுரை:

இயேசு பாடுகள் படுமுன் கெத்ஸமனி தோட்டத்தில், தனிமையாக தன் துயரத்தை தந்தையாம் இறைவனிடம் வெளிப்படுத்தியதை நினைவு கூறுகிறோம். இப்போது நற்கருணை நாதர், தலைமைப் பீடத்திலிருந்து தனியாக அலங்கரிக்கப்பட்ட இடத்திற்குப் பவனியாக எடுத்துச் செல்லப்படுவார். அவ்வாறு எடுத்துச் செல்லும்போது அனைவரும் முழந்தாள் பணிந்து நமது வணக்கத்தை செலுத்துவோம். தனிமையில் தனது துன்பநிலையை எண்ணி துயரப்படும் நம் இயேசுவோடு நாமும் விழித்திருந்து செபிப்போம்.

பாடல்: பாடுவாய் என் நாவே... இறுதியாக மாண்புயர் கீதம்..


(பின்பு சிலுவைகள் அனைத்தும் திரையிடப்பட வேண்டும்)

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்