மீண்டும் பாடசாலைக்கு செல்வோமா....
செல்லமே!.........செல்லமாய்!...
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு மீண்டும் திரும்பும் நாள் வந்து விட்டது. விடுமுறையில்விரும்பிய நேரம் தூங்கி, விரும்பியபடி விளையாடி, தொலைக்காட்சி பெட்டியின் முன் மணிக்கணக்காய் அமர்ந்து பொழுதை மகிழ்த்து உறவினர் வீடு, விளையாட்டு என பொன்னான மகிழ்வான நேரங்கள் எல்லாம் இனி நிறைவில் மட்டுமே என வருந்தும் செல்லக் குட்டீஸ்களுக்கு செல்லமே! செல்லமாய்! ஒரு செய்தி...
பள்ளிக்குச் செல்ல புதிய பை, தண்ணீர் பாட்டில், புதிய நோட்டுக்கள், எழுது பொருட்கள், புதிய சீருடை என எல்லாம் பார்த்துப் பார்த்துப் புதிதாய் தயார் நிலையில் சந்தோஷம் கொடுத்தாலும், மனதில் ஓரத்தில் ஒரு வருத்தம், பயம், இனி சந்தோஷங்கள் எல்லாம் அவ்வளவு தானா? என்ற ஏக்கம் எல்லாம் மனதில் எழுவது இயல்பு தானே....
செல்லக்குட்டி, பள்ளியும் உனக்கு ஒரு சந்தோஷக் களமே. எப்படி என கேட்கிறாயா?
கண்ணை மூடிக் கொள். நீ தான் Super boy/Super girl என நினைத்துக் கொள். பள்ளிக்குள் நுழைகிறாய். புதிய வகுப்பு செல்கிறாய், புதிய நண்பர்களை பார்க்கிறாய். புதிய ஆசிரியர் வருகிறார். எல்லாம் புதிது எங்கும். எதிலும் புதிது. புதியவை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறதா? கண்ணை மூடிக் கொண்டு இந்த கல்வி ஆண்டில் நான் தான் Super boy/Super girl என எண்ணிக் கொள். இந்த ஆண்டு கல்வியாலும் உனக்குரிய தனித் திறமையிலும் நீ என்ன சாதிக்கப் போகிறாய்? அனைவரிலும் நீ எப்படி சிறந்து விளங்கப் போகிறாய்? என திட்டம் இடு. கண்ணைத் திற. கனவுத் திட்டமே இவ்வளவு சந்தோஷம் என்றால் நீ சாதித்து உயர்ந்தால் எவ்வளவு சந்தோஷம் தரும் எண்ணிப்பார்.
உன் திட்டத்தை தினமும் நீ பார்க்கும் படி எழுதி வை. இறைவனின் அருள் வேண்டி உன் திட்டத்தை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொள். உன் குறிக்கோளில் இருந்து எச்சூழலிலும் தவறி விடக் கூடாது. சரியாச் செல்லமே? ஆண்டு முடிவில் பார். நீ தான் Super boy/Super girl ஆக சிறந்து உயர்ந்து நிற்பாய்.
பள்ளிக்குத் திரும்புவோம்
புதியாய் பிறப்போம்
சிறப்பாய் சாதிப்போம்.
வாழ்த்துக்களுடன் ஆன்ட்டி அமலி-மதுரை.